Category Archives: பொது

142 வருட பழமையான தத்துவம்

das-kapital

வேறென்ன சொல்ல?


இன்றைய தேவை
மார்க்ஸ் என்னும் மேதை.

கடை நிலை வரும் முன்
கம்யூனிசம் வரட்டும்.

அன்பின் வழி

அன்புடன் கூடிய பிடிவாதம் உறுதி. அன்பில்லாத உறுதி பிடிவாதம். காந்தி அகிம்சையில் உறுதியாக இருந்தார். ஹிட்லர் யூதர்களை அழிப்பதில் பிடிவாதமாக இருந்தார்.

கொள்கைப் பிடிப்புடன் இருக்கும் பல சந்தர்ப்பங்களில் நான் வற‌ட்டுப் பிடிவாதம் பிடிப்பவனாகவே தென்பட்டிருக்கிறேன். என் குடும்பத்தாரும் அவ்வாறே நினைத்த‌துதான் பிரச்சனை. சொல்லிப் புரிய வைக்கும் திறமையும் திராணியும் இல்லாததால் பிடிவாதமாகவே என் கொள்கைகளைக் காப்பாற்றி வந்திருக்கிறேன் என்பதும் உண்மை. கொள்கை என்று சொன்னாலே கொள்ளிக்கட்டையை நீட்டிய‌து போல‌ பயந்து போனார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. அவ்வாறே வாழ்ந்து பழகியவர்கள். என்னாலும் மாற்றிக் கொள்ள முடியாது. தனித் தன்மை போய்விடும். அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் சிக்கல் வழி போலானது.

இத்தகைய கூட்டுக்குள் வசிப்பவர்களன்றி தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்கு பிரச்சனை புரிவது சிரமமாகவே இருக்கக்கூடும். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் இப்படி சொல்லலாம். “உங்களுக்கு எது முக்கியம்? கொள்கைகளா அல்லது குடும்பத்தினரின் அன்பா. எதை நீங்கள் விட்டுத் தரத் தயார்?”

காலச் சுழற்சியின் தீர்வு எதுவாக இருக்க முடியும்? ஒன்று, “இவன்/இவள் இப்படித்தான்” என்று குடும்பம் முடிவு செய்து அனுசரித்து நடந்து கொள்வார்கள். அந்த “இவன்/இவள்” பொருளாதாரத்திலும் சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டால் அவ்வனுசரிப்பு அன்பும் ஆச்சரியமும் கலந்ததாக இருக்கும். அல்லது, குடும்பத்தின் வட்டத்திற்குள் “இவன்/இவள்” கொள்கைகள் காற்றில் விடப்பட்டும். இவ்விரண்டிலும் நேரடிப் புரிதலை விட அகங்காரமும் மேலோச்சுதலுமே ஓங்கி இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நெடுநாளைய சிக்கலைத் தவிர்க்க ரஹ்மான் கூறிய “அன்பின் வழி” சிறந்ததாகவே தோன்றிய‌து.

“நான் இப்படித்தான். இவையே என் கொள்கைகள். இதை பாதிக்கும் எதுவும் என் விருப்பத்திற்கெதிரே. இருப்பினும், குடும்பத்தின் அன்பு கருதி (நலன் அல்ல) என் விருப்பத்திற்கு எதிரானவற்றையும் அன்புடன் செய்கிறேன்” – இதை சொற்கள் மூலமாகவும் செயல்கள் மூலமாகவும் சமீப கால‌மாக செய்து வருகிறேன். முதலில் சிரமமாகத்தான் இருந்தது. மெல்ல மெல்ல‌ இது சரியான் தீர்வாக அமையும் என்ற நம்பிக்கை பிறந்த‌து. குடும்பத்தினரும் என் விருப்பத்திற்கு எதிரானவற்றை செய்யச் சொல்லி எதிர்பார்ப்பதில்லை. விட்டுக் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி பெற்றுக் கொள்வதில் இருப்பதில்லை. யோசித்துப் பார்த்ததில் இத்தனை நாள் இருந்தது கொள்கைக்கும் அன்பிற்குமான போட்டியல்ல. பயத்தாலும் அகங்காரத்தாலும் (ஈகோ) உருவான போட்டி.

இதுதான் சரி என்று சொல்லவில்லை. என் புரிதல்களுக்கும் தேடல்களுக்கும் இது நன்மை பயக்கிறது.

ரஹ்மானுக்கு நன்றி. நாம் மிகவும் ரசித்து உள்வாங்கிக் கொள்கிற சிறிய புரிதல்கள் கூட வாழ்க்கையில் மிகப் பெரும் பங்கு வகிப்பது ஆச்சர்யம் கலந்த அற்புதம்.