jump to navigation

கண் பேசும் வார்த்தைகள் – 7 அக்டோபர் 15, 2009

Posted by jaggybala in கதைகள், கலாச்சாரம்.
Tags: ,
7 comments

ஒவ்வொரு மனித வாழ்க்கையும் எண்ணற்ற தத்துவங்களை உள்ளடக்கியது. அவை யாவும் கூற முனையும் கருத்து ஒன்றே. பிற மனிதனையும் உயிரினங்களையும் நேசிக்கச் சொல்லும் “மனித நேயம்” என்பதே அது.

மரணத்திற்குப் பின் மனிதன் சொர்கத்திற்குச் செல்வானா, நரகத்திற்குச் செல்வானா என்பதை இரண்டு கேள்விகளைக் கொண்டு கடவுள் தீர்மானிப்பதாக எகிப்து நாட்டு மக்களிடையே ஒரு நம்பிக்கையுண்டு.

முதல் கேள்வி, “நீ பூமியில் மகிழ்ச்சியாக இருந்தாயா?”

இரண்டாவது கேள்வி முக்கியம். “உன்னால் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்களா?”

நாம் எந்த விஷயத்துக்காக மரணத்தைச் சந்திக்கவும் தயாராக இருக்கிறோமோ, அந்த விஷயம்தான் நம் வாழ்க்கையின் அர்த்தம். வாழ்க்கை என்பதும் ஒரு பயணம்தான். எப்போது என்ன நிகழும் என்று உணரமுடியா பயணம்.

இப்போது நான் சென்றுகொண்டிருப்பது அப்படிப்பட்ட பயணம்தான். நடுக்கடல் வெளிநீர் போல் அமைதியாய் நின்றிருந்த வாழ்க்கையில் சமீப நாட்களாய் பேரலை வீசுகிறது. பேருந்து சன்னல் வழியே இரவுக்காற்றின் குளிரை அனுபவித்தபடி பயணிக்கிறேன். வேறு ஊர் தேடி. வேறு வாழ்க்கை தேடி.

நானும், சுசியும். நேற்று முதல் அவள் என் உயிர்த்தோழி மட்டுமல்ல. உடல்தோழியும் கூடத்தான். ஒரே நாளில் எத்தனை நிகழ்வுகள்!

என் தோள்களில் முகம் சாய்த்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் உறக்கம் எனக்கு உற்சாகத்தைத் தருகிறது. விழித்திருக்கையில் அவளைக் கண்டு நான் பயப்படுகிறேன். இதில் மறைப்பதற்கும் வெட்கப்படுவதற்கும் ஒன்றுமில்லை. சுசி அசாதாரணமானவள். பலசமயங்களில் அவள் அழகும் ஆளுமையும் என்னை அச்சமூட்டுகிறது. ஆச்சரியம் கலந்த அச்சம்.

எனக்கு பயணம் முழுக்க என்னென்னமோ நினைவுகள். உன் அப்பா ஆட்களுடன் துரத்தி வருவது போல… தங்குவதற்கு இடம் கிடைக்காமல் நாமிருவரும் நடு ரோட்டில் நின்று கொண்டிருப்பதைப் போல… வேலை கிடைக்காமல் பட்டினி கிடப்பதைப் போல… நீ என்னை விட்டுச் சென்று விடுவது போல… என்றெல்லாம் பலவிதமாய் கற்பனை செய்தேன்.

வண்டி ஈரோடு பேருந்து நிலையத்தில் நிற்கையில் மணி பத்தரை. நீ இன்னும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாய். உன்னால் எப்படி தூங்க முடிகிறது என்று வியக்கிறேன். என்னைப் போலன்றி நீ நிம்மதியாய் இருக்கிறாயோ?

“சுசி, ஈரோடு பஸ் ஸ்டேண்ட் வந்துருச்சு”

நீ தூக்கம் கலைந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு புன்னகைக்கிறாய். உன் நுண்ணிய மெல்லுணர்வுகளக் கூட என்னால் அக்கணம் புரிந்துகொள்ள முடியவில்லை.

பெட்டிகளை எடுத்துக்கொண்டு கீழிறங்கினோம். உன் குட்டைக்கூந்தலை கைகளால் அள்ளி ஒழுங்குபடுத்தினாய். “உன்கிட்ட எவ்வளவு பணம் இருக்கு?”

“பத்தாயிரம்”

“என்கிட்டயும் அவ்ளோதான் இருக்கும். சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் எடுத்துட்டியா?”

“ம்ம்..”

“ஷ்வேதாவோட ஃபோன்?”

“குடுத்திட்டேன்”

“நல்லவேளை.. இல்லாட்டி ட்ரேஸ் பண்ணி அப்பா ஆளுக வந்திருப்பாங்க. ஈரோடு வர்றத நீ யார்கிட்டயாவது சொன்னியா?”

“சுசி… நம்ம ஈரோடு வர்றது இப்பதான் எனக்கே தெரியும்”

“சரி வா சாப்பிடலாம்” – எதிரில் இருந்த சரவணபவனுக்குள் நுழைந்தோம். சாப்பிட்டு முடிக்கும் வரை நான் எதுவும் பேசவில்லை.

“நீ போய் ஒரு டாடா இண்டிகா டேக்ஸி புடிச்சுட்டு வா. நான் வெளியே வந்து நிற்கிறேன்”

சரியென்று தலையாட்டி வெளியே சென்றேன். டேக்ஸி அழைத்து வந்த சில நிமிடங்களில் நீ வந்தாய். டிரைவர், “எங்க சார் போகணும்” என்றார். நான் சுசியைப் பார்த்தேன்.

“ஹோட்டல் ட்ரைவ் இன்” என்றாய். உன் முகம் பொலிவுடன் இருந்தது. நான் படபடப்பு குறையாமல் இருந்தேன். ஃப்ரெஷ்னர் காகிதம் தந்தாய். நான் முகம் துடைத்தும் வியர்த்தேன்.

ஹோட்டல் வந்ததும் முன் இறங்கி வேகமாய் நடந்தாய். நட்சத்திர விடுதியாய் இருக்க வேண்டும். இரண்டடி நடந்ததும் அலங்காரத்தின் பிரமிப்பில் லயித்திருந்தேன். உன் பார்வை என்னை பின்னிழுத்துச் சென்றது. ரிஷப்சன் வந்தடைந்ததும் அங்கிருந்தவர்களிடம் புன்முறுவித்தாய். “யெஸ் மேடம்” என்றனர். அவர்கள் பேசிய முதல் ஆங்கில வாக்கியம்.

“ஹாய்.. மை நேம் இஸ் திவ்யா. ஹி இஸ் மை ஹஸ்பண்ட். வீ ஆர் கமிங் ஃப்ரம் பெங்களுர்”

“ரிசர்வேஷன் பண்ணி இருக்கீங்களா?”

“நோ.. இட் வாஸ் ஏன் அன்எக்ஸ்பக்டட் ஜர்னி”

“என்ன விஷயமா வந்திருக்கீங்க”

“ஐயாம் எ ஜர்னலிஸ்ட், சி.என்.என்.”

“ஒன் மினிட் மேடம்”. அவர்கள் பேசிய இரண்டாவது ஆங்கில வாக்கியம்.

பணம் பாதாளம் வரை பாயும், பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். நம் நாட்டில் ஆங்கிலம் அதலபாதாளம் வரை பாயும், பதினொன்றும் செய்யும். ஆங்கிலம் தெரியாதவர்களிடமோ நன்கு தெரிந்தவர்களிடமோ இவ்வித்தை எடுபடாது.

மனிதர்களைப் படிக்கும் குணத்தில், பேச்சில், எழுத்தில்.. என சகலமுமாய் உன்னிடம் வாய்த்திருக்கிறது.

“இந்த ஃபார்ம் ஃபில் பண்ணுங்க மேடம்” – அறைக்கதவின் சாவியை அருகில் வைத்தார்கள். ஒரு நாள் வாடகையை கவனித்தேன். நாலாயிரம்.

களைப்பில் அன்றிரவு மெய்மறந்து தூங்கினேன். எழும்போது நீ தயாராய் நின்றுகொண்டிருந்தாய்.

“டைம் என்ன சுசி?”

“ஏழு”

“எதுக்கு இந்நேரத்துல ரெடியாகி நிக்கறே?”

“நீயும் கிளம்பு, ஒன்பது மணிக்கு அங்க இருக்கணும்”

“எங்க?”

“மேரேஜ் ரெஜிஸ்டர் ஆபிஸ்”

***

மத்தளம் கொட்டவில்லை. வரிசங்கம் நின்றூதவில்லை.  முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தலுமில்லை. பையில் இருந்து தாலியை எடுத்தேன். கை பரபரத்தது. சுசி சிரம் தாழ்ந்து நின்று அன்றே நான் பார்த்தேன். வெட்கமா? சூழ்நிலையா? பரவசமா? சொல்லத் தெரியவில்லை. அந்நிலையிலேயே அவளும் இருந்திருக்க வேண்டும்.

தாலியை சுசியின் கழுத்து வழியே எடுத்துப் பின் சென்றேன்.  கூந்தலுக்குள் கைகளை நுழைத்து முடிச்சுகளிட்டேன்.

முதல் முடிச்சு… சுசி, இனி அதிகாரப்பூர்வமாய், சட்டப்பூர்வமாய் நீ என்னவள்.

இரண்டாம் முடிச்சு… ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். சுசி, உன் வெற்றிக்குப் பின்னால் நான் நிச்சயம் இருப்பேன்.

மூன்றாம் முடிச்சு… சுசி, என் அகத்தில் குடிகொண்டிருப்பவள் நீ. அதில் நீயே ஜீவன், நீயே ஆத்மா.

தாலி கட்டிமுடித்ததும் உன்னை ஆரத்தழுவும் எண்ணம் ஆட்கொண்டது. திருமணம் முடிந்ததும் முத்தமிடச் சொல்லுமாமே கிறித்தவ மதம், உணர்வுகளை மதிக்கும் அவ்வெண்ணத்திற்கு தலை வணங்குகிறேன்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். பதிவாளர் வெற்றிலை துப்பும் கோப்பையைத் தேடிக்கொண்டிருந்தார். சாட்சிக் கையெழுத்திட வந்தவர் வாங்கிய இருநூறு ருபாய்க்கு மட்டும் அளவாய் கைதட்டினார். மற்றவர்கள் தத்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் ஓரக்கண்ணால் பார்த்தார்கள்.

“சார், வீடு ஏதாவது வாடகைக்கு கிடைக்குமா?” பதிவாளரைப் பார்த்துக் கேட்டேன்.

“யோவ் பரமசிவம், உன் டிபார்ட்மெண்ட்” – என்னைப் பார்த்து பதிவாளர் சிரித்தார்.

“என்ன தம்பி பாக்கறீங்க, இங்க கல்யாணம் பண்ண வர்ற எல்லாரும் ஒரு ப்ராசஸ் வச்சிருப்பீங்க போல. முதல்ல சாட்சிக் கையெழுத்துக்கு ஆள், அப்புறம் வாடகைக்கு வீடு, அப்புறம் வேலை…” கெக்கெக்கே என்று கரைப்பற்கள் தெரிய சிரித்தார்.

“கவலைப்படாதீங்க, எல்லாத்துக்கும் ஆள் வச்சிருக்கோம். போய் சந்தோஷமா இருங்க”

***

நாட்கள் நகர நகர மீண்டும் அமைதியாய் மாறியது நம் வாழ்க்கை. தெளிந்த நீரில் மலர்கள் மிதந்து செல்வதைப் போன்றதொரு பரிசுத்தமான அன்பு நிறைந்த வாழ்க்கை.

சுசி, காதலையும் காமத்தையும் இணைக்கும் மையப்புள்ளியில் மட்டும் என்னை ஆண்மகனாய் உணர்ந்தேன். மற்ற நேரங்களில் உன் துதிபாடவும் உனக்கு உபகாரம் செய்யும் சேவகனாகவும் இருக்கவே ஆசைப்படுகிறேன். உன் மீதான என் காதல் சிறு புள்ளியில் ஆரம்பித்து அண்ட சராசரமாய் வளர்ந்து கொண்டே போகிறது.

“டேய், வேலை எப்படி இருக்கு?”

“ம்ம்.. பரவால்ல”

“நீ அங்க என்ன பண்ற”

“நகைக்கடையில என்ன வேலை, பாதி நேரம் சும்மா தான் இருக்கேன்… “

“யூ நோ, சம்திங் இஸ் லேட் ஃபார் மீ”

நான் என்னவென்று யோசித்தும் புலப்படவில்லை. “என்ன லேட்?”

“பீரியட்ஸ்”

பெரும்பாலான ஆண்களுக்கு இதைப் பற்றியே எண்ணமே அச்சமூட்டும்.

சிறிது நேர அமைதிக்குப் பின் பேசினேன். “எப்படி?”

“எப்படீன்னா…? போன மாசமே ஆகியிருக்க வேண்டியது. இன்னும் ஆகலையே”

“நல்லா தெரியுமா?”

“ஏண்டா… நீ லூசா? ஆகியிருந்தா எனக்குத் தெரியாதா?”

“இல்ல, போன மாசமே ஆகியிருக்க வேண்டியதுன்னு சொன்னியே.. அது நல்லா தெரியுமான்னு கேட்டேன்”

“ம்ம்…”

“நாளைக்கு டாக்டர்கிட்ட போலாமா?”

“ம்ம்… ஒரு நிமிஷம் இரு. ஏன் லேட்டாகியிருக்கும்னு உனக்கு புரிஞ்சுதா?”

“எதாச்சும் கண்டத சாப்பிட்டு இருப்ப…”

உன் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். “என்ன?” – நானும் சிரித்தேன்.

“மார்ச் 5 ஞாபகம் இருக்கா?”

“யெஸ்”

“நீ அன்னைக்கு பண்ணதாலதான் இது தள்ளிப் போயிருக்கும்னு நினைக்கிறேன்”

அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

“ஐ திங்க் ஐயாம் ப்ரக்னன்ட்!”

[தொடரும் ...]

கண் பேசும் வார்த்தைகள் – 6 அக்டோபர் 15, 2009

Posted by jaggybala in கதைகள், கலாச்சாரம்.
Tags: ,
1 comment so far

அடுத்த நாள் நீ கல்லூரிக்கு வரவில்லை.

சுசி, உன ஆங்காரம் என் நினைவலைகளில் வந்து வந்து போனது. உன்னுடன் கலந்திருந்த ஒவ்வொரு மணித்துளிகளையும் எண்ணி எண்ணி களிக்கிறேன். உன்னை ஆரத்தழுவும் பொருளாய் என்னை பாவிக்கிறேன்.

என்னை நானே வித்தியாசமாய் உணர்ந்தேன்! சுசி, உன்னை கடவுள் போலல்லவா என் மனதில் வைத்திருந்தேன். என் மனதிற்குள் எப்போது காமம் குடிகொண்டது? என் கற்பனாலோகத்தில் உன்னை உயரத் தூக்கி வைத்துக்கொண்டேனா? என்னை இவ்வுலகத்திற்குக் கொண்டுவந்தவள் நீதானா? பரம்பொருளாய் நினைத்திருந்த உன்னை யுகப்பொருளாய், என் பொருளாய் உணர்த்தியவள் நீதானா? காமம் மனிதனை மிருகமாக்கும் என்று சொல்வார்களே, ஆனால் அதுவே என்னை மனிதனாக்கி இருக்கிறது. நடைமுறை மனிதனாய்.

நீ கல்லூரிக்கு வராதது எனக்கு அச்சம் கலந்த பரிதவிப்பை உண்டு செய்தது. மதியம் சாப்பிடப் பிடிக்காமல் புல்வெளியில் அமர்ந்திருந்தேன். என்னை நோக்கி ஷ்வேதா வந்துகொண்டிருந்தாள். கல்லூரித் தோழி. அட்டெண்டன்ஸில் சுசிக்கு அடுத்த ஆள்.

சுசி எங்கள் காதலை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருக்கிறாள். காதலை மறைத்து வைப்பது போலி வாழ்க்கை என்பது அவள் எண்ணம். சுசியின் தைரியம் எப்போதுமே ஆச்சர்யமூட்டும்.

“சுந்தர், நீ இங்க இருக்கியா? உன்ன கேண்டீன்ல தேடிட்டு இருந்தேன்”, சற்று பரபரப்புடனே தென்பட்டாள்.

“சொல்லு ஷ்வேதா”

“சுசி மெசேஜ் அனுப்பி இருக்கிறா. இந்தா…” என்று மொபைல் ஃபோனை நீட்டினாள்.

Sundar, wait for my evening call. Love – Sushi.

“இந்த மெசெஜ் எப்ப வந்தது?”

“ஒன் அவர் முன்னாடி. நீயே மொபைல வச்சிரு. நான் ஈவ்னிங் வாங்கிக்கறேன்”

“இல்ல பரவால்ல, உன்கிட்டயே இருக்கட்டும். கால் வந்தா நான் வாங்கிக்கறேன்”

“நோ.. நோ.. சுசி கிட்ட மொபைல் ஃபோன் இல்ல. முக்கியமான விஷயமா இருக்கும்னு தோணுது. இதுவரைக்கும் யாருக்குமே அவ மெசெஜ் பண்ணதில்ல”

செல்போனை வாங்கிக்கொண்டேன். மதியத்திற்குப் பின் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. மெசேஜையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குள் விதவிதமாய் எண்ணங்கள் ஓடின. முதன்முறையாய் நாம் சேர்வதைப் பற்றிய சாத்தியக்கூறு பயமும் தொற்றிக்கொண்டது. நீ இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்துபார்க்க முயல்கிறேன்.

உன் சோஷலிஸ தத்துவங்கள் உனக்குள்ளேயே மாண்டுவிடுமா? உன்னை சராசரிப் பெண்ணாக்கிவிடுவார்களா?

இல்லை… உன் மூளை புத்தகங்களால் பதப்பட்டு சிந்தனைகளால் உருவப்பட்டு அனுபவங்களால் செதுக்கப்பட்டு நிற்கிறது. போராட்ட குணம் உனக்குள் திளைத்திருக்கிறது. முடியும் வரை போராடுபவர் சிலர். இருக்கும் வரை போராடுபவர் சிலர். நீ இரண்டாம் வகை. சுசி, உன்னை நானறிவேன். பெண்ணாகவும் போராளியாகவும்.

பயத்தையும் மீறி எனக்கு பெருமையாய் இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தென். மணி நான்கு. ஐந்து மணிக்கெல்லாம் வகுப்புகள் முடிந்துவிடும். மெசேஜை மீண்டும் படித்தேன். மீண்டும். மீண்டும். மீண்டும்.

நாலரை மணிக்கு செல்ஃபோன் மணி அடித்தது. கைகள் நடுங்கியது. பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தேன். எதுவும் பேசாமல் காதிலேயே வைத்துக்கொண்டிருந்தேன்.

மறுமுனையில் ஒன்றும் பேசவில்லை. நான் என் மொத்த பிரக்ஞையையும் செவியில் கொண்டுவந்தேன். உலர்ந்த உதடுகள் ஒட்டிப்பிரியும் ஓசை கேட்டது. அது சுசி என்பதை நான் அறிந்திருந்தேன்.

“சுசி” – குரல் தாழ்த்தி அழைத்தேன்.

“ஒன் செகண்ட்… ஒன் செகண்ட்…”. உன் குரலில் பதற்றம் தெரிந்தது. நீ எது சொன்னாலும் அதில் அர்த்தம் இருக்கும். நீ பேசும்வரை காத்திருந்தேன், பொறுமையின்றி.

பத்து விநாடிகளுக்குப் பின் பேசினாய். “யெஸ்… “

“சுசி, எனி ப்ராப்ளம்… என்னாச்சுடா?”

” நம்ம விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு”

“அய்யய்யோ…”

“டேய், டோன்ட் ஓவர் ரியாக்ட். நத்திங் அன்எக்ஸ்பெக்டட். இது நடக்கும்னு உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். எப்ப நடக்கும்னுதான் காத்துக்கிட்டிருந்தோம்.”

“இப்ப நீ ஓ.கே தானெ?”

“யா யா … அப்பா பெங்ளூர்ல இருந்து வந்திட்டு இருக்கார். அதுவரைக்கும் ஐயாம் கைன்ட் ஆஃப் ஹவுஸ் அரெஸ்ட்”

“இப்ப என்ன பண்றது சுசி?”

“ஏன்டா… எல்லாத்தையும் நானேதான் சொல்லணுமா?”

“…”

“ஓ.கே. அப்பா வர்றதுக்குள்ள நான் எப்படியோ உன்னோட ஹாஸ்டலுக்கு வந்திர்றேன். யூ பேக் அப் யுவர் திங்ஸ். நாம கிளம்பறோம்”

“வாட்…?”

“வீ ஹேவ் டு மூவ். வேற வழியில்லை”

“ரொம்ப அவசரப்படறோம் சுசி.. இன்னும் காலேஜ் கூட முடிக்கல. எனக்கு வேலையில்ல. எங்க போய் என்ன பண்ண முடியும்னு சொல்லு”

“டேய், லவ் பண்ணப்ப இதெல்லாம் யோசிச்சியா? மாடப்புறா, மயிலிறகு அப்படீன்னு கனவு கண்டுட்டே இருந்தா போதாது, திஸ் இஸ் ரியாலிட்டி.”

“எனக்கு பயமா இருக்கு சுசி… “

“டேய் ஸ்வீட்ஹார்ட்… என்னை கூட்டிட்டுப் போ, வாழ்க்கை குடு, குடும்பம் நடத்தி காப்பாத்து, என்னை சந்தோஷமா வச்சிக்க … இப்படி எதுவுமே நான் கேட்கல.. கேட்கவும் மாட்டேன். இவ்ளோ நாள் நீ பார்ட்-டைம் ஜாப் பண்ணி உன்னால வாழமுடிஞ்சுதுல்ல.. அதே மாதிரி, வேற ஊருக்குப் போய் பண்ணுவோம். என்னோட ஏட்டிடியூடுக்கு உலகத்துல எங்க போனாலும் எனக்கு வேலை இருக்கும்.”

“நீ என்ன சொன்னாலும் எனக்கு சரியா படல சுசி”

“முட்டாள்தனமா பேசாத. இங்கிருந்தா கொன்னுடுவாங்க. நீ உலகத்துல இருந்ததுக்கான அடையாளத்தையே அழிச்சுருவாங்க. ஐ டோண்ட் வான்ட் டு லூஸ் யூ”

அமைதியாய் நின்றிருந்தேன்.

“ஐ லவ் யூ டியர்.. ஐ லவ் யூ ஸோ மச்” என்றாய். உன்னையே செல்ஃபோனாய் பாவித்து இறுகப் பற்றிக்கொண்டிருந்தேன்.

“எத்தன மணிக்கு இங்க வர்ற?”

“ஏழு மணிக்கு வந்திர்றேன். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் எல்லாம் ஆளுக இருப்பாங்க. டேக்ஸி புடிச்சு கரூர் வரைக்கும் போயிடலாம். அங்கிருந்து வேற எங்கயாவது…”

“நீ வரவேண்டாம் சுசி, டைம் ஆகும். பிரச்சனை அதிமாகும். நான் ஆறு மணிக்கெல்லாம் டேக்ஸி புடிச்சுட்டு உங்க வீட்டுக்கு அடுத்த வீதியில் வெயிட் பண்றேன்.”

“ம்ம்..”

“இந்த செல்ஃபோன் எங்கிட்டதான் இருக்கும். ஏதாச்சும்னா கால் பண்ணு”

“ம்ம்..”

“அப்ப வச்சிரட்டுமா?”

“ம்ம்..”

உன் குரல் தழுதழுத்ததைப் போல தோன்றியது. அழுகையா, வசைபாடுகிறாயா, மிரட்டலா என்று புரியவில்லை. “ஏதாவது சொல்லனுமா சுசி” என்றேன்.

“டு யூ ஸ்டில் திங்க் அபவுட் எஸ்டர்டே நைட்?” என்றாய்.

“ஐ வில் நெவர் ஃபர்கெட் எஸ்டர்டே நைட்”

***

குடிசைக்கு வெளியே பழனியின் சிரிப்புச் சத்தம் கேட்டது.

கட்டிப்போட்டிருந்த மரத்தை கைகளால் தடவினேன். காலருகே மரத்தில் அடிக்கப்பட்டிருந்த ஒரு வலஞ்சுழி ஆணி தென்பட்டது. மெல்ல கீழிறங்கி மயக்கம் வந்து படுத்திருப்பதைப் போல கிடந்தேன். கைகள் ஆணியை அசைத்து அசைத்து இலகுவாக்கிக் கொண்டிருந்தன.

ஐந்து நிமிடத்தில் ஆணி கையோடு வந்துவிட்டது. அதன் முனை கூர்மையானதாய் இல்லை. ஆனால் ஒன்றரை அடி நீளத்தில் இருந்தது. கை கட்டுகளில் ஆணியை நுழைத்து அறுக்க ஆரம்பித்தேன். முகத்தில் வியர்வை உருவாகி இரத்தத்துடன் கலந்து கீழே சொட்டியது. சில நிமிட போராட்டங்களில் கட்டு அவிழ்ந்தது.

அங்கேயே காத்திருந்தேன். கயிறை கைகளில் ஒப்புக்கு சுற்றிக்கொண்டு மரத்தின் பின்னால் வைத்துக்கொண்டேன். கயிறின் நுனி இடது உள்ளங்கையில் இருந்தது. வலது உள்ளங்கையில் ஆணி.

குடிசையை நோக்கி முருகேசன் வந்துகொண்டிருந்தான்.

[தொடரும் ...]

கண் பேசும் வார்த்தைகள் – 5 அக்டோபர் 15, 2009

Posted by jaggybala in கதைகள், கலாச்சாரம்.
Tags: ,
add a comment

மார்ச் 5. மாலை ஐந்து மணி.

சுசியின் வீட்டிற்கு இருமுறை சென்றிருக்கிறேன். வீட்டின் பரப்பளவில் ஒரு சின்ன கிராமமே உருவாக்கலாம். ஆனாலும் உள்ளே செல்லும்போது சிறைக்குள் செல்லும் உணர்வுதான் மேலோங்கியிருக்கும்.

என் குலம் கோத்திரம் எதுவும் நானறியேன். நீ சோஷலிஸம் பேசும் ஐயங்கார்… வித்தியாசமான, அவசியமான கலவை.

உன் வீட்டருகே வந்ததும் கடிகாரத்தைப் பார்த்தேன். ஐந்தைக் கடந்திருந்தது. எப்போதும் நீ வீட்டிற்கு வெளியே காத்திருந்து என்னை அழைத்துச் செல்வாய். அன்று உன்னைக் காணவில்லை. தயக்கத்துடன் வாசலை நோக்கி மெல்ல நடந்தேன்.

கேட்டில் நின்றுகொண்டிருந்த வாட்ச்மேன் ஓடிவந்தார். “சார், நீங்கதானே சுந்தர்?”

“ஆமா”

“நீங்க வந்தா உள்ள வரச்சொல்லி சின்னம்மா சொன்னாங்க”

“அவங்க வரலியா?”

“இல்லைங்க”

கேட்டைத் திறந்ததும் உள்ளே சென்றேன். ஆளரவம் இல்லை. அங்கு நிலவிய அமைதி மயானத்தை நினைவுபடுத்தியது. மனம் படபடத்தது. நேரே அவள் அறைக்குச் சென்று கதவைத் தட்டி, “சுசி…” என்றழைத்தேன்.

மெல்லிய காலடி ஓசை கேட்டது. சுசியேதான். அவள் காலடி ஓசையை நான் துல்லியமாய் அறிவேன். கதவைத் திறந்து, “கம் இன்” என்றாய். உள்ளே வந்ததும் கதவைத் தாழிட்டு என்னைத் திரும்பிப் பார்த்தாய்.

சுசி, அன்று தான் உன்னை முதன்முதலில் சேலையில் பார்த்தேன். நீயே கட்டியிருக்கவேண்டும். சேலை ஒழுங்கில்லாமல் இருந்தது. ஆனால், அதுவே உன் அழகைக் கூட்டியது. நீ அணிகலன்கள் அணிந்து நான் பார்த்ததும் அன்றே. ஊதா நிறத்தில் கம்மல் வளையல்கள் அணிந்திருந்தாய். கண்ணிமைக்காமல் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நீ என் எண்ணங்களை படித்துக்கொண்டிருந்தாய் போலும். “யூ ஆர் ஸ்டேரிங் மீ” என்றாய்.

சட்டென நினைவுக்கு வந்தவனாய், “சாரி” என்றேன்.

“நோ நோ… ஐ லைக் இட். இட் வாஸ் மேன்லி”

“ஹேப்பி பர்த்டே, மிஸ் ட்வென்டி” – கண்களைச் சிமிட்டினேன்.

“தேங்க் யூ” – நீ சட்டென என்னை அணைத்துக் கொண்டாய்.

மென்மையான அரவணைப்பு என்றாலும் எனக்குள் அது பலநூறு மாற்றங்களைக் கொடுத்தது. உன் வாசத்தை நுகர்ந்தேன். கண்கள் உள்ளிழுத்துக்கொண்டன.

கூந்தலை அவிழ்த்து விட்டு மல்லிகைப் பூ சூடியிருந்தாய். மெல்லிய நுனிப்புல் போன்ற உன் கூந்தல்முடி என் முகத்தில் பட்டது. அதில் ஈரம் இருப்பதை நான் உணர்ந்தேன். அச்சத்தில் உடம்பு லேசாக உதறியது.

என் அகஎழுச்சிகளை நீ உணர்ந்துகொண்டவளாய், “எனி ப்ராப்ளம்?” என்றாய். உன் கைகள் இன்னும் என் தோள்களை தழுவியே இருந்தன.

“நோ.. ” என்று ஆரம்பிக்க என்னை நானே அந்நியமாய் உணர்ந்தேன். “யெஸ்…” என்றேன்.

“ஐ லவ் மை ஸ்வீட் பேபி” என்று என் தலைமுடியைக் கோதிவிட்டாய். உன் அங்கங்கள் என் கிளர்ச்சியைத் தூண்டிக்கொண்டிருந்தன.

மெல்ல மெல்ல என்னை நான் இழந்துகொண்டிருந்தேன். சுசி, நீ வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்கிறாயோ என்று தோன்றியது.

இப்போது நீ என் முகம் பார்த்து நின்றிருந்தாய். உன் உதடுகளும் என் உதடுகளும் எட்டு மில்லிமீட்டர் இடைவெளியில் இருந்தன. நான் முன்னே சென்றேனா நீ முன்னே வந்தாயா என்று தெரியவில்லை. இதழ்களின் இடைவெளி பூஜ்யமானது. அதை நான் ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்திருந்ததை அப்போதுதான் அறிந்தேன்.

அச்சத்தில் விலகினேன். “சுசி, ஐயாம் சாரி. ஐ திங்க் ஐ ஷுட் கோ நௌ”

“இட்ஸ் ஓ.கே… இட்ஸ் ஓ.கே… ஐ ஜஸ்ட் ஃபெல்ட் லைக் கிஸ்ஸிங் யூ”

அங்கு நடப்பது கனவு போலிருந்தது. கனவு முடிந்துவிடக் கூடாதென்ற மனநிலையில் இருந்தேன். மெல்ல நடந்து அறையின் வராண்டாவிற்குச் சென்று ஜன்னல் திரையை விலக்கினேன். வானத்தை கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. எனக்கு உன் கூந்தல் ஞாபகத்திற்கு வந்தது. மீண்டும் உன்னை நுகரவேண்டும் போலிருந்தது. எண்ணத்தை திசை திருப்ப முயற்சித்தேன்.

“சுசி, கேக் கட் பண்ணலாமா”

“ஷ்யூர்” – கிஃப்ட் பேக்கை பிரித்து உள்ளிருந்த ஸ்ட்ராபெர்ரி கேக்கை வெளியில் எடுத்தாய். எனக்கு உன் இதழ்கள் ஞாபகத்திற்கு வந்தன. ச்சே… என்ன இது, என் மனம் ஏன் கண்டபடி அலைகிறது?

“சுந்தர், உனக்குத் தெரியுமா… இன்றுதான் ரோசா லக்ஸம்பர்குக்கும் பிறந்தநாள்”

“ஓ…”

“ஷி இஸ் எ லெஜன்ட். ஷி இஸ் மை இன்ஸ்பிரேஷன்.”

“யாரு அவங்க?”

“ம்ம்… கூகிள் இட்”. எழுந்து சென்று திரைகளை மூடி லைட் சுவிட்ச்சை அணைத்தாய். அச்சம் அதிகமானது. “சுசி, ரொம்ப இருட்டா இருக்கு. லைட்ஸ் இருக்கட்டுமே”

“மெழுகுவர்த்தி ஏத்தினா சரியாயிடும்பா…” உன் குரல் இருட்டில் கலந்திருந்தது.

“யாராவது வந்துட்டாங்கன்னா?” என்றேன். அந்தக் கேள்வியில் உள்ளர்த்தங்கள் இருந்ததை நான் அறிவேன்.

“யாரும் வரமாட்டாங்க. அப்பா பெங்களூர் போயிருக்கார். இருந்தாக்கூட என்னோட ரூமுக்கு வரமாட்டார். ரூம்ல ஏசி இல்ல.”

நான் கேக் அருகே சம்மணமிட்டு அமர்ந்திருந்தேன். எழுந்தால் மனம் அலைபாயும்.

திடீரென, “ஐ வாண்ட் எம்.எஸ்.வி. நௌ” என்றாய். கட்டில் அருகே சென்று ம்யூசிக் சிஸ்டத்தில் சி.டியை நுழைத்தாய். வால்யூம் சன்னமாய் காதுகளை வருடிச் செல்லும் அளவில் மட்டும் இருந்தது.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும் …

இசையை ஹம்மிங் செய்து கொண்டே என்னருகே வந்தாய். இருவரும் ஒவ்வொரு மெழுகுவர்த்தியாய் கேக்கினுள் சொருகினோம். கடைசி மெழுகுவர்த்தியை நான் செர்ரிப்பழத்தின் அருகே வைத்தேன்.

நீ மெழுகுவர்த்திகளைப் பற்றவைத்ததும் அவ்வெளிச்சத்தில் உன் முகம் பிரகாசமாய்த் தெரிந்தது. வெண்ணிறமான வட்ட முகம். என்னைப் பார்த்துச் சிரித்தாய்.

சுசி, என் மனதை உன்னால் உணரமுடியும். நீ அவ்வளவு கவனமாக அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். ஆனால், இக்கணம் எனக்குள் என்ன தோன்றுகிறது என்பதை நீ அறிவாயா?

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காண வேண்டும் …

நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்
நானாக வேண்டும் …

உன் மூச்சுக்காற்று இசையுடன் கலந்தது போலிருந்தது. மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தாய். உன் கண்கள் விரிந்து கன்னங்கள் மெல்ல உப்பின.

கேக்கை வெட்டியதும் முதல் துண்டை எனக்குத் தந்தாய். நான் வாங்கி அதை உனக்கு ஊட்டினேன். அந்நேரம் உன் கண்கள் என்னை விழுங்குவதைப் போல உணர்ந்தேன். என் இத்தனை நேர உணர்ச்சிகளையும் உன் ஒற்றைப் பார்வை காண்பித்தது. சுசி, என்னிடமிருந்து உன் மனதையும் மறைக்க முடியாது.

பாதி கேக்கை வாயில் வைத்தபடி என்னருகே வந்தாய். என் பாகத்தை நான் உண்ண ஆரம்பித்தேன். கேக் முடிந்திருந்தது. ஆனாலும் நாம் சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம்.

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும் …

பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்
பசியாற வேண்டும் …

என்னைக் கீழே தள்ளி என் மார்புப் பகுதியை முத்தமிட்டாய். இவ்வளவு அபாயகரமாய் என்றைக்கும் நீ சென்றதில்லை.

“இந்த ட்ரெஸ் செக்ஸியா இருக்கா…” என்றாய். உன் முந்தானை அவிழ்ந்து என் சட்டை மேல் படர்ந்திருந்தது.

எதுவும் பேசாமல் உன்னை இறுகக் கட்டிக்கொண்டேன். உன் அக எழுச்சிகளை எனக்குள் திணிப்பவனைப் போல, உன்னையே எனக்குள் அடக்கிக்கொள்ள முயல்பவனைப் போல பற்றிக்கொண்டேன். உன்னைத் தூக்கிக் கொண்டு இன்னொரு உலகத்திற்கு ஓடிக்கொண்டிருப்பது போலிருந்தது.

என் காதருகே வந்து, “நௌ ஐ ஃபீல் லைக் டூயிங் இட்” என்று கிசுகிசுத்தாய்.

மென்மை மென்மை என்றது உன் கழுத்து. உன் முகத்திலும் கன்னங்களிலும் கழுத்திலும் வெறி கொண்டவனைப் போல மாறி மாறி முத்தமிட்டேன்.

முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம். முத்தம்.

தலைமுடியைப் பின்னிழுத்து முகம் பார்த்தாய். “டேய்… நான் எங்கேயும் ஓடிப் போகமாட்டேன்… மெதுவா…”

சுசி, அந்நேரம் நான் தலையாட்டும் பொம்மை போலவே இருந்தேன். நீயே என்னை வழிநடத்திச் சென்றாய். உன் மற்ற செயல்களைப் போலவே இதையும் ரசித்தேன். உன் விரல்பிடித்து நடக்கும் சிறுகுழந்தை ஆனேன். பின் நீயும் குழந்தையாய் ஆனாய். என்விரல் பிடித்து நடந்தாய். ஓருடல் ஓருயிராய் உருத்தரித்தோம். வெட்கத்தில் ஒருவருக்கொருவர் ஆடையாய் மாறினோம்.

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
உயிர் சேர்ந்த பின்னே …

உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை
வேறேதும் இல்லை …

நாம் ஒன்றாய்க் கலக்கையில் நம் கண்கள் பரிபாஷை பேசிக் கொண்டன. அவை என்ன பேசிக்கொண்டன என்பதை இன்றுவரை நாமறியோம்.

என் கண்களில் பயத்துடன் கலந்த கண்ணீர் குடிகொண்டிருந்தது. “சுசி…” என்றேன்.

“ஷ்ஷ்ஷ்… எதுவும் பேசாத. நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” நீ ஏதோ ஆங்கிலப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாய்.

நான் அமைதியாய் படுத்திருந்தேன்.

“ஆர் யூ ஹேப்பி?” என்றாய்.

எனக்கு சொல்லத் தெரியவில்லை. எழுந்துசென்று உன்னை கட்டிக்கொண்டேன்.

என் தோள்களை இறுகப் பற்றினாய். “யூ நோ வாட், யூ ஆர் கோயிங் டு ஸ்டே வித் மீ டுநைட். வீ  ஆர் கோயிங் டு மேக் லவ் எகைன்…”

“வாட்?”

“… அன்ட் எகைன்”

“நோ!”

“… அன்ட் எகைன்”

“…”

“பட் ஒன்லி ஆஃப்டர் த டின்னர்” – எழுந்து சென்றாய்.

இரண்டு மெழுகுவர்த்திகள் மட்டும் உயிரைப் பிடித்து எரிந்து கொண்டிருந்தன. சுசி… பரவசத்தில் லயித்திருந்த அன்றிரவில் அடுத்த நாள் வரவிருக்கும் பூகம்பத்தை நாம் அறிந்திருக்கவில்லை.

[தொடரும் ...]

உன்னைப்போல் ஒருவன் செப்டம்பர் 22, 2009

Posted by jaggybala in சினிமா.
Tags: ,
4 comments

எந்தக்கதைக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு சிறப்பம்சம். அதுவும் சினிமா போன்ற வெகுஜன மீடியாவிற்கு சுவாரஸ்யம், மிக அவசியம். இதுதான் கதை, க்ளைமேக்ஸை திரையில் காணுங்கள் என்று சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. காலையில் ஆரம்பித்து மாலையில் முடிகிறது கதைக்கரு. இரண்டு மணி நேர படபடப்பு. பரபரப்பு. பரிதவிப்பு. துவக்கம் முதல் இறுதிவரை கமல்ஹாசனுக்கு ஒரே உடை. மோகன்லாலுக்கு இரண்டு.

தமிழ் மக்கள் ரசனைக்கேற்ப படம் எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது மக்களை ஏய்க்கும் குணம். அறிவீனம். ஹிந்தியில் ஆமிர், அப் தக் சப்பன் என்று பல சினிமாக்கள் உலகத்தரம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டன. அப்படி ஒரு பயணம்தான் உன்னைப்போல் ஒருவன்.

ஹேராம் படத்தில் ஒரு வசனமுண்டு. வயதான சாகேத் ராம் கமலைப் பார்த்து பேரன் சாகேத் ராம், “எங்க தாத்தா எப்பவுமே ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னு எந்தக் கதையையும் ஆரம்பிக்க மாட்டார். நான் இருந்த ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னுதான் ஆரம்பிப்பார்” என்பார். அதைப்போல பெரும்பாலான படங்களில் வெகுவாரியான முக்கியத்துவத்தைத் தன் கதாபாத்திரத்திற்கே கொடுப்பவர் கமல்.

ஆனால், இந்தப் படத்தின் நாயகன் என மோகன்லாலையே சொல்லவேண்டும். நடிப்பதற்கான அதிகபட்ச வாய்ப்பும் அவருக்கே. மிடுக்கான தோற்றமும் கம்பீரமான குரலுமாய் லால் இன்னொரு சிவாஜி. கமலுக்கு இயல்பான கதாபாத்திரம். தீபாவளிக்கு டிவி பேட்டி கொடுப்பதுபோல எல்லா காட்சிகளிலும் அனாசயமாய் நடித்துவிட்டுச் செல்கிறார். கருவறுத்தல் பற்றிப் பேசுகையில் நம்மையுமறியாமல் கண்களில் நீர் ஊறுகிறது.

ஆரிஃப் ஆக வரும் போலீஸ் கதாபாத்திரம் கன கச்சிதம். எங்கேயோ பார்த்ததுபோல இருக்கிறதே என்று யோசித்தால், அட… அபியும் நானும் படத்தில் சர்தார்ஜியாக வரும் ஹீரோ! கமல்ஹாசன் படத்தில் மற்ற நடிகர்களைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமே.

சேதுராமனாய் வரும் மற்றொரு போலீசிடம் மோகன்லால், “ஒரு வேளை இந்த ஆப்ரேஷன் தோத்து நீங்க…” என்று ஆரம்பிக்கையில், “செத்துப்போய்ட்டான்னு கேக்க்றீங்களா சார், நோ ப்ராப்ளம் சார். ட்யூட்டி ஃபர்ஸ்ட்” என்கிறார். இப்படிப்பட்ட ஆட்கள் உண்மையிலும் இருக்கிறார்கள் என்று நினைக்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது.

ஷ்ருதியின் இசை எப்படி இருக்கிறதென்ற ஆர்வத்துடன்தான் சென்றேன். ஆனால், படத்தின் போக்கில் இசையை ஊர்ந்து கவனிக்கவில்லை. எப்படியும் மோசம் என்று சொல்லமுடியாது. இசை சரியில்லை என்றால் உடனே காட்டிக் கொடுத்துவிடும். கேமரா, தொழில்நுட்பம், வசனம் என அனைத்தும் கதையைச் சுற்றியே பயணிக்கிறது. பிரதானமாய். பிரமாதமாய்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகனானதால், விமர்சனத்தை இத்துடன் நிறுத்திக் கொள்வது நலமென்று தோன்றுகிறது. பாடல், நடனம், காதல், காமெடி, சண்டை, பஞ்ச் வசனம், ஏன்… ஹீரோயின் கூட இல்லாத தரமான தமிழ் சினிமா தந்த கமல்ஹாசனுக்கு எம் வந்தனங்கள். உன்னைப்போல் ஒருவனாய் இருக்க நாங்களும் விரும்புகிறோம்.